இன்னும் ஆறு திங்கள்கள் உன் அவசரம் பொறுத்திருந்தால்
அழகாய் பிறந்திருப்பேன் உன்னை அம்மா என்றிருப்பேன்
என்னை ஈன்ற பொழுதினிலே நீ பெரும் இன்பத்தில்
இரு மடங்கென் இதழ்களிலே இன்பமாய் பூத்திருப்பேன்
உன் முகம் நான் காண உன் அகத்தில் காத்திருந்தேன்
என் முகம் நீ காணும் ஏக்கமும் இழந்தது ஏன்?
தீமைகள் செய்தேனோ என்னை தீண்டவும் மறுத்தாயோ
கருவறையில் வைத்தென்னை தீக்கிறையாய் கொடுத்தாயோ
குழலும் யாழும் இனியது என்றென் குரலும் கேட்க மறுத்தாயோ
உயிரை கொடுத்தது போதும் என்றென் உறவும் முறிக்க விழைந்தாயோ
என்னை அழித்து உன்னை காக்க எமன் கொடுத்த ஔஷதமோ
இசைந்த உடனே இறந்து இங்கே என்னை முந்தியது உன் மனமோ
என் முகமும் அறியாய்! மொழியும் கேட்டிலாய்!
மூப்பில் இறந்து என் நாடு வந்தால்
பிறக்கும் முன்பே இறந்த என்னை உன்
பிள்ளை என்றே அறிவாயா? "அம்மா" என்பேன் அணைப்பாயா?
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment